சென்னையில் பல இடங்களில் இன்று காலை மழை பெய்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் நிலைகொண்ட வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாடு புதுச்சேரியில் பல இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.
மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் சென்னையில் நுங்கம்பாக்கம், வடபழனி, கிண்டி, உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது.
மேலும் போரூர், மதுரவாயல், வானகரம், ஆலப்பாக்கம் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் பரவலாக லேசான மழை பெய்துள்ளது.
முன்னதாக இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டி சென்னை, சேப்பாக்கம் அரங்கில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. சில தினங்களாக சென்னையில் சில இடங்களில் மழை பெய்துவருவதால் போட்டி தடைபடுமோ என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் தமிழ்நாடு வெதர்மேன் தனது பதிவில் சென்னைக்கு ஞாயிற்றுக் கிழமைக்கு மழைக்கு வாய்ப்பில்லை என்றும் திங்கள் கிழமை மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அந்தவகையில் இன்று காலை பல இடங்களில் மழை பெய்துள்ளது.